திராவிட மாடலை நாடு முழுவதும் பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக வளரும்! - முதல்வர்
முதல்வர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் பக்க பதிவு...
தமிழ்நாட்டின் திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்கும்பொருட்டு, அதற்கான தீர்வு காண உத்தரப் பிரதேச திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேலும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுதொடர்பாக கள ஆய்வு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன்.
தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக் கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி!" என்று பதிவிட்டுள்ளார்.
மகப்பேறு இறப்பு விகிதம்
பிரசவத்தின்போது அல்லது பிரசவம் முடிந்து 42 நாள்களுக்குள் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையை வைத்து மகப்பேறு இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பிரசவங்களில் 35 பேர் உயிரிழக்கும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 141 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) 2019-20ல் 54 என்ற நிலையிலிருந்து 2022-23ல் 35 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது. இது தேசிய சராசரி 88-யை விடக் குறைவாகும்.