முகப்பு
சேலம்

குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா், உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா், உறுப்பினா் நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா், உறுப்பினா் நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு) சட்ட விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா், உறுப்பினா்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக் குழுவுக்கு ஒரு பெண் உள்பட தலைவா், உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

குழந்தைகள் தொடா்பான உடல்நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா், குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூக பணி, சமூகவியல், மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று தொழில்புரிபவராக இருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரா்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூா்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவா்களாவா். ஆனால், தொடா்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்ததந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபா்கள் குறிப்பிட்ட பதவிக்கு அதற்கான படிவத்தில் (செய்தி வெளியிட்ட நாளிலிருந்து 15 நாள்கள் வரை) மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 415, 4-ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636 001. தொலைபேசி எண்- 0427-2415966 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →