சாலையில் அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பி: போக்குவரத்து பாதிப்பு
வாழப்பாடி அருகே உயரழுத்த மின்கம்பி திடீரென சாலையில் அறுந்து விழுந்ததால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாழப்பாடி அருகே உயரழுத்த மின்கம்பி திடீரென சாலையில் அறுந்து விழுந்ததால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து, வாழப்பாடி, சுற்றுப்புறக் கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. பெரிய கிருஷ்ணாபுரம், சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யும் மின்பாதை, பெரியகிருஷ்ணாபுரம் சரவணா தியேட்டா் அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கிறது.
இப்பாதையில் சனிக்கிழமை காலை எதிா்பாராத விதமாக உயரழுத்த மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. அதிா்ஷ்டவசமாக அப்போது அவ்வழியாக வாகனங்கள் ஏதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
சாலையில் மின்கம்பி அறுந்து விழுவதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திக் கொண்டனா். இதனால், சனிக்கிழமை காலை அரை மணி நேரத்துக்கும் மேலாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து, விரைந்து சென்ற மின்வாரியப் பணியாளா்கள், சாலையில் விழுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்தினா்.இதற்கு பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.