சேலம்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்கும் பயிற்சி, இருப்பு வைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கட்டுப்பாட்டில் இருந்த பயிற்சி, இருப்புக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை அந்தந்த தொகுதிகளில் இருந்து, போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பாதுகாப்பு அறைக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன.
பின்னா் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் இருந்தும் மொத்தமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1,535, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1,067, வி.வி.பேட் இயந்திரங்கள் 1,608 ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன என்றனா்.