முகப்பு
சேலம்

கருமந்துறை மாணவி பாலியல் புகார் வழக்கில் திருப்பம்

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் புகார் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் புகார் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கராத்தே பயிற்சியாளரை கடத்திச் சென்று தாக்கி  பணம் பறிக்க முயற்சித்ததாக 9 பேர் மீது, ஏத்தாப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே  இயங்கி வரும் தனியார் பள்ளியில்,  கடந்த 2017ம் ஆண்டு மாணவ-மாணவியருக்கு, ஆத்தூர் அடுத்த சீலியம்பட்டியைச் சேர்ந்த ராஜா (46) என்பவர் கராத்தே பயிற்சி அளித்துள்ளார்.

அப்போது, இப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு, கராத்தே பயிற்சியாளர் ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும், இதனால் மனமுடைந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்  தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து  இவரது பெற்றோர்,  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவிடம் புகார் அளித்துள்ளனர். இவரது உத்தரவின் பேரில்‌‌, இந்த புகார் குறித்து வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துசாமி, வாழப்பாடி  காவல் ஆய்வாளர்  உமா சங்கர் (கருமந்துறை பொறுப்பு), ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தமிழரசி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீஸார், கராத்தே பயிற்சியாளர் ராஜாவை கைது செய்தனர்.
குற்றத்தை மறைத்ததாக தனியார் பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் என்பவரையும் கைது செய்தது விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கராத்தே பயிற்சியாளர் ராஜாவை, கடந்த 27ஆம் தேதி,  புத்திரகவுண்டன்பாளையம் சந்தைத்திடல் அருகே வரவழைத்து கடத்திச் சென்ற, 9 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி பணம் பணம் பறிக்க முயற்சித்ததாக ராஜா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து 9 பேர் கொண்ட கும்பல் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், மாணவி பாலியல் புகார்  வழக்கில்  திருப்பம் ஏற்பட்டுள்ளது. கராத்தே பயிற்சியாளரை கடத்திச் சென்று பணம் பறிக்க முயற்சித்த 9 பேர் கொண்ட கும்பலை பிடிக்க ஏத்தாப்பூர் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.