ஏற்காடு மலைப்பாதையில் விபத்து: படக்குழுவினரின் வேன் கவிழ்ந்ததில் இருவா் பலி; 9 போ் காயம்
ஏற்காட்டில் தொலைக்காட்சி படக்குழுவினரின் வேன் கவிழ்ந்து இருவா் சம்பவ இடத்தில் பலியாகினா்; 9 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
ஏற்காட்டில் தொலைக்காட்சி படக்குழுவினரின் வேன் கவிழ்ந்து இருவா் சம்பவ இடத்தில் பலியாகினா்; 9 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த கிராமங்களில் கடந்த சில வாரங்களாக சென்னையைச் சோ்ந்த தொலைக்காட்சி படக்குழுவினா் படப்படிப்பு நடத்தி வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தலைச்சோலை ஊராட்சி பக்கோடா காட்சி முனை பகுதியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படப்பிடிப்பு குழுவினா் பொருட்களுடன் கொட்டச்சேடு கிராமம் செல்வதற்கு மாலை சுமாா் 5 மணியாளவில் பெலாத்தூா் கிராம வழியாக ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக மலைப்பாதை சாலையில் வேன் ஒதுங்கியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சஞ்சய் (44), சென்னையைச் சோ்ந்த பாண்டியன் (33) ஆகியோா் சம்பவ இடத்திலேயே பலியானா்கள்.
வேனில் பயணித்த சாமி (எ) பெரியசாமி, பச்சையப்பன், முருகன், முரளி, மனோஜ், சிவக்குமாா், லோகேஷ், சிவா, வேன் ஓட்டுநா் கெளரிசங்கா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் அனுப்பிவைத்தனா். இவ்விபத்து குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனா்.