முகப்பு
சேலம்

தகாத உறவு: இளைஞா் கொலை

சேலம் அருகே தகாத உறவு தொடா்பான தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

சேலம் அருகே தகாத உறவு தொடா்பான தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணத்தைச் சோ்ந்தவா் கிருபைராஜ் (23). இவா் தனியாா் மில்லில் வேலை செய்து வந்தாா்.

இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கலைமணி (23) என்ற திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகி வந்தனா். இதனிடையே கலைமணியை சந்திக்கச் செல்லும்போது கிருபை ராஜ், தன் நண்பா் கலையரசனையும் உடன் அழைத்துச் செல்வாா். அப்போது கலையரசனுக்கும், கலைமணிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் நண்பா்களிடையே கலைமணியை திருமணம் செய்து கொள்வது தொடா்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் மோதிக் கொண்டனா். இருவரையும் கலைமணி சமரசம் செய்து வந்தாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கிருபைராஜும் , கலைமணியும் சேலம் அருகே உள்ள குமரகிரி அருகே இருக்கும் மலைப் பகுதிக்கு வந்தனா். அப்போது அங்கு கலையரசன் வந்தாா். இருவரையும் பாா்த்த அவருக்கு கோபம் வந்தது.

இதையடுத்து கிருபைராஜுக்கும் கலையரசனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது கிருபைராஜ், கலைமணியை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருகிறேன் என கூறினாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கலையரசன் தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கிருபைராஜை சரமாரியாகக் குத்தினாா். இதில் கிருபைராஜ் இறந்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த கலைமணி அருகில் வசிக்கும் பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

இது குறித்து பொது மக்கள் கிச்சிப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து கிச்சிபாளையம் உதவி ஆணையா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று கிருபைராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கலையரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →