பின்வாங்குவதோ சரணடைவதோ கிடையாது... சாம்பியன்ஸ் லீக்கின் ஸ்பார்டன் - ரியல் மாட்ரிட்!
சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தும் ரியல் மாட்ரிட் அணி குறித்து...
சாம்பியன்ஸ் லீக்கின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ரியல் மாட்ரிட் அணி மான்செஸ்டர் சிட்டியை 1-5 என வீழ்த்தி அபார வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சாம்பியன்ஸ் லீக்கில் முதல் கட்ட ஆட்டத்தில் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் இல்லாத காரணத்தினாலும் குறிப்பாக, பெப் கார்டியாலோவின் வியூகத்தில் மான்செஸ்டர் சிட்டி எளிதாக வெல்லுமென பலரும் நினைத்தார்கள். அதைப் பொய்யாக்கும் விதத்தில் ரியல் மாட்ரிட் வீரர்கள் மறக்க முடியாத சம்பவத்தை அரங்கேற்றினார்கள்.
முதல் கட்ட ஆட்டத்தில் 0-3 என முன்னிலை வகிக்க, இரண்டாம் கட்ட ஆட்டத்தில் 1-2 என வென்றது. முதல் சுற்றில் வெல்வர்டே ஹாட்ரிக் அடிக்க, இரண்டாம் சுற்றில் 2 கோல்களையும் வினிசியஸ் ஜூனியர் அடித்து அசத்தினார். இந்த இருவரும்தான் இந்தச் சுற்றில் சூப்பர் ஸ்டார்களாக மிளிர்ந்தார்கள். வினிசியஸ் தான் யார் என்பதை மீண்டும் நிரூபிக்க, வெல்வர்டே கூடுதலாகப் பங்களித்து ஆச்சரியப்பட வைத்தார்.
எல்ஸி அணிக்கு எதிரான போட்டியில், அர்டா குலேர் கால்பந்துத் திடலின் பாதிக்கும் மேல் பகுதியில் இருந்து, அதாவது 70 மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை சரியாக வலைக்குள் உதைத்து அனைவரையும் மிரள வைத்தார். புஸ்கஸ் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனும் அளவுக்கான சிறப்பான கோல்.
இந்த அணிக்கு புதிய பயிற்சியாளராக ஆல்வரோ அர்பெலோவா ஜனவரியில் நியமிக்கப்பட்டார். இவரது பொறுப்புக்குப் பிறகு ரியல் மாட்ரிட் அணி தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.
ஆல்வரோ அர்பெலோவாவின் இன்ஸ்டாவின் முகப்புப் பக்கத்தில், “பின்வாங்குவதோ சரணடைவதோ கிடையாது. அதுதான் ஸ்பார்டன் விதி” எனக் குறிப்பிட்டுள்ளார். ’300 ஸ்பார்டன்’ திரைப்படத்தின் உத்வேகத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் என வந்தாலே இந்த அணி பேய் மாதிரி விளையாடுகிறது. இதுவரை 15 முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளார்கள். அதிகபட்சமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக இந்த அணி 2023/24 சீசனில் வென்றிருந்தது. நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கி அசத்தி வருகிறது.
சாம்பியன்ஸ் லீக்கின் ஸ்பார்டன் அணியாக ரியல் மாட்ரிட் இருந்து வருகிறது. இந்தப் புதிய பயிற்சியாளர் வருகைக்குப் பிறகு அந்த அணியில் புது ரத்தம் பாய்ச்சியதுபோல விளையாடி வருகிறது.
16ஆவது முறையாக சாம்பியன்ஸ் லீக்கை வென்று, தனது ஆதிக்கத்தை நிரூபிக்கும் என்ற ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை கால்பந்து ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.