முகப்பு
சேலம்

சேலம்: எல்லைப்பிடாரி அம்மன் கோவில் சத்தாபரணம் விழா

சேலம் அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் கோவில் நிறைவு விழாவையொட்டி சத்தாபரணம் நிகழ்ச்சி அம்மன் திருவீதி உலாவினை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
பகிர்:


சேலம் அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் கோவில் நிறைவு விழாவையொட்டி சத்தாபரணம் நிகழ்ச்சி அம்மன் திருவீதி உலாவினை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் மிகவும் பழமையான மற்றும் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. கோவிலில் பூ சாட்டுதல் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், பூமிதி வைபவம் நடைபெற்று வந்தது. மேலும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மேலும் திருக்கோவில் அருகே பல்வேறு இடங்களில் அம்மனின்   பிரத்யேக அலங்காரம் வைக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது

திருமணதடை நீங்குவது உள்பட பல்வேறு வகையான வேண்டுதல்களை நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் இன்று பக்தர்கள் அம்மன் ஊர்வலத்தில் கலந்துகொண்டு அக்னி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

இந்த நிலையில் அக்னி குண்டத்திற்கு இறங்கும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பூசாரி தலையில் சுமந்த படி அஸ்தம்பட்டி, சின்னத்திருப்பதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் பூமிதி எனப்படும் அக்னி குண்டத்திற்கு அம்மன் வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு மஹாதீபாராதனை காண்பித்தபின், திருக்கோவில் பூசாரி அக்னியை கையில்எடுத்து மூன்று முறை சுத்தியவுடன் அக்னி குண்டத்தில் இறங்கினார். அப்போது பக்தர்களின் ஓம் சக்தி கோசம் பக்தர்களை மேலும் பரவசத்துக்குள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து  ஒருவார காலமாக கையில் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கினர். இதில் விரதமிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். 

இந்த நிலையில் கடந்த எட்டு நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மேளதாளங்கள் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலம் நடைபெற்றது. கோவில் முன்பு இருந்து துவங்கிய ஊர்வலம் விடிய விடிய நடைபெற்றது குமரசமைபட்டி காந்தி ரோடு, ஜான்சன் பேட்டை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலத்தினை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். கடந்த எட்டு நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த திருவிழாவின் நிறைவு நாள் என்பதால் விழா குழுவினர் இந்த சத்தாபரண விழாவிற்கு முன் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.