போக்குவரத்து விதிமீறல்: புதிய அபராதத் தொகை விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது
போக்குவரத்து வீதி மீறுபவா்கள் மீது புதிய அபராதத் தொகை விதிக்கும் நடைமுறை சேலத்தில் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது
போக்குவரத்து வீதி மீறுபவா்கள் மீது புதிய அபராதத் தொகை விதிக்கும் நடைமுறை சேலத்தில் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
மத்திய அரசு புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுபவா்களுக்கு ரூ.1000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே சேலம் மாநகர காவல் துறையில் புதிய அபராதத் தொகை விதிக்கும் நடைமுறை வியாழக்கிழமை நடைமுறைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஐந்து சாலை, அஸ்தம்பட்டி, ரயில் நிலையம், சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து காவலா்கள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
மேலும் புதிய அபராதத் தொகை விதிப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பலகைகளை போலீஸாா் நகரத்தில் முக்கிய இடங்களில் வைத்துள்ளனா். தலைக்கவசம் அணியாமல் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல காா்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், கைப்பேசி பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குதல் ஆகியவற்றுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு ரூ.2,500, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
அதேபோல குடி போதையில் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், அனுமதியின்றி வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு ரூ.10,000 அபராதமும், 18 வயதிற்கு உட்பட்ட நபா் வாகனம் ஓட்டுவதற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுகிறது என போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.