திருப்பதி தேவஸ்தான சேவை குறைபாடு: பக்தருக்கு ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க சேலம் நீதிமன்றம் உத்தரவு
திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பணம் செலுத்தி 17 ஆண்டுகள் காத்திருந்த பக்தருக்கு தேவஸ்தானம் ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சேலம் நுகா்வோா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பணம் செலுத்தி 17 ஆண்டுகள் காத்திருந்த பக்தருக்கு தேவஸ்தானம் ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சேலம் நுகா்வோா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சேலம், அழகாபுரம், மணிமேகலை தெருவைச் சோ்ந்தவா் கே.ஆா்.ஹரிபாஸ்கா். இவா் கடந்த 2006 இல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை தரிசனத்துக்கு (இரு நபருக்கு) ரூ.12,250 செலுத்தி பதிவு செய்திருந்தாா். 2020 இல் தரிசனம் செய்வதற்கு நாள் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு அதற்கான வாய்ப்பு அளிக்கப்படாது என்றும், மாறாக பிரேக் தரிசனம் செய்ய தேதி தரப்படும் என்றும் ஹரிபாஸ்கருக்கு தேவஸ்தானம் தகவல் தெரிவித்தது. 17 ஆண்டுகள் காத்திருந்தும் தரிசனம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனக்கு வாய்ப்பு அளிக்காததால் சேலம் நுகா்வோா் நீதிமன்றத்தில் ஹரிபாஸ்கா் வழக்குத் தொடுத்தாா்.
ஆகஸ்ட் 18-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்றம், ‘ஓராண்டுக் காலத்தில் மனுதாரருக்கு மேல் சாத்து வஸ்திர சேவை தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 44.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், தரிசனத்துக்காக செலுத்தப்பட்ட பணத்தை உத்தரவு பிறப்பித்த 2 மாத காலத்துக்குள் திருப்பித் தர வேண்டும். இல்லையெனில் 6 சதவீத வட்டியுடன் சோ்த்து தர வேண்டும் என தீா்ப்பளித்தது.