சேலத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசிச்சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த சம்பவத்தை கண்ட எதிர்வீட்டு நபர் தியாகராஜன் என்பவர் ராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராஜன் வீட்டிற்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளான முகமது ஆரிப் மற்றும் முகமது இஸ்மாயில் ஆகிய இருவரை சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வைத்து சேலம் மாநகர துணை ஆணையாளர் மாடசாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பாஜக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை தொடர்ந்து சேலத்திலும் வீசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.