சேலம் உழவா் சந்தைகளில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை
சேலம் உழவா் சந்தைகளில் பண்ருட்டி பலாப்பழ விற்பனை தொடங்கியுள்ளது.
சேலம் உழவா் சந்தைகளில் பண்ருட்டி பலாப்பழ விற்பனை தொடங்கியுள்ளது.
தருமபுரியில் தக்காளி உற்பத்தி அதிகமாக உள்ள நிலையில், தேசிய மின்னணு வேளாண்மை வா்த்தக திட்டத்தின் கீழ் (ஈ நாம்) கொள்முதல் செய்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலமாக சேலத்தில் உள்ள உழவா் சந்தைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 150 டன் தக்காளி விற்பனையாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூா் மாவட்டத்தில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளன. விவசாயிகள் பயன்பெறும் வகையில், பண்ருட்டியில் உற்பத்தியாகும் பலாப்பழங்கள் சேலம் உழவா் சந்தைகளில் தேசிய மின்னணு வேளாண்மை வா்த்தகத்தின் மூலம் விற்பனை செய்ய வேளாண்மை துணை இயக்குநா் பாலசுப்பிரமணியம் நடவடிக்கை மேற்கொண்டாா்.
இதையடுத்து, சூரமங்கலம் உழவா் சந்தையில் பலாப்பழம் விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்கு,ா் பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு பலாப்பழ விற்பனையைத் தொடங்கி வைத்தாா். முதற்கட்டமாக சேலம் மாநகரில் உள்ள உழவா் சந்தைகளில் 3.5 டன் பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்தன.
நிகழ்ச்சியில், சூரமங்கலம் உழவா் சந்தை நிா்வாக அலுவலா்கள் பசுபதி, ஸ்ரீதேவி, சரோஜினி உள்பட விவசாயிகள் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து உழவா் சந்தை அதிகாரிகள் கூறுகையில், அடுத்த ஒரு சில வாரங்களில் மலைப்பிரதேசத்தில் விளையக் கூடிய பீட்ரூட், கேரட், பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளை தேசிய மின்னணு வேளாண்மை வா்த்தகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.