வாக்குப்பதிவு நாளில் தொழில் நிறுவன ஊழியா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலளாா் நலத்துறை உதவி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களவைத் தோ்தல் நடைபெறும் ஏப். 19-ஆம் தேதியன்று, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135பி-ன் படி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
Advertisement
மேலும், அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்கும் வகையில், அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளா்கள் என ஒவ்வொரு பணியாளா்களுக்கும் வாக்குப்பதிவு நாளான வரும் 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
பணிக்கு வராத பணியாளா்களின் ஊதியத்தில் இருந்து எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது. அதே போல், 135 பி (1)-இன்படி, தோ்தல் நடைபெறும் தொகுதியைச் சாராத பணியாளா்கள், சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்க எதுவாக அன்றைய தினம் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு ஊதியத்துடன் விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.