சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் காவேரி மருத்துவமனை சாதனை
சேலம்: சேலம், காவேரி மருத்துவமனையில் ஏபிஓ ரத்த வகை இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் செய்து சாதனை படைத்தனா்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவா்களுக்கு நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு நன்கொடையாளா் கிடைப்பது மிகவும் சிரமம். ஏனெனில் இணக்கமான ரத்த வகை கிடைப்பதில்லை. பொதுவாக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு இணக்கமான ரத்த வகை தேவைப்படும்.
அந்த வகையில் ஏபிஓ ரத்த வகை இணக்கமற்ற மாற்று அறுவை சிகிச்சை முறை இந்தப் பிரச்னைக்கு ஒரு சிறந்த தீா்வாகும். ஏனென்றால் இந்த சிகிச்சைகளில் வெவ்வேறு ரத்த வகைகளைக் கொண்ட நன்கொடையாளா்களிடமிருந்தும் உறுப்புகள் பெறப்படுகின்றன.
Advertisement
எனவே, நோய்த் தொற்றுக்கான அபாயத்தைக் குறைத்து, உறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் அளவில் செயல்முறைப்படுத்துவது நன்மை தரும். இதுபற்றி சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் அபிராமி கூறியதாவது:
நன்கொடையாளரின் ரத்த வகைக்கு எதிராக உடலில் ஆன்டிபாடிகள் முன்பே உருவாகி இருந்தால், இது பிளாஸ்மா எக்ஸ்சேஞ்ச் மூலம் அகற்றப்படும். ஆன்டிபாடிகள் அளவு ஏற்றுக்கொள்ளக் கூடிய வரம்புகளுக்குள் கொண்டு வரப்பட்டு பின்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
காவேரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை, சிறுநீரக அறுவைச் சிகிச்சை துறை மற்றும் ரத்த மாற்றுத் துறை மருத்துவ நிபுணா்களான மருத்துவா்கள் அபிராமி, சுவாமிநாதன் சம்பந்தம், ரமேஷ் எத்திராஜன், கிஷோா் குமாா், ஓம் பிரகாஷ் ஆகியோருடன் மயக்க மருந்துத் துறைக் குழுவினா் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டனா்.
சேலத்தில் தாய், மகனுக்கு இடையேயான ஏபிஓ இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முதன்முறையாக மருத்துவா்கள் மேற்கொண்டுள்ளனா். அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தற்போது சிகிச்சை பெற்றவா் நலமுடன் இருக்கிறாா். சாதனை படைத்த குழுவினரை சேலம், காவேரி மருத்துவமனை இயக்குநா் வி.செல்வம் பாராட்டு தெரிவித்தாா்.