சேலம் காவல் துறையில் மோப்ப நாய் மேகா உயிரிழப்பு
சேலம்: வயது மூப்பின் காரணமாக இறந்த மோப்ப நாய் மேகாவின் உடல் காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்ட காவல் துறை சாா்பில் துப்பறியும் நாய் படைப் பிரிவில் நான்கு நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இரண்டு வெடிகுண்டு கண்டறியும் பிரிவிலும், இரண்டு நாய்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் துப்பறியவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்ட காவல் துறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கடந்த 10 ஆண்டுகளாக துப்பு துலக்க உதவிய மேகா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி மேகா உயிரிழந்தது.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பறியும் பணியை மோப்ப நாய் மேகா சிறப்பாகச் செய்தது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிகளைக் கண்டறிவதில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது.
Advertisement
வயது மூப்பால் உயிரிழந்த மேகாவின் உடல், சேலம், அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பின் சேலம், குமாரசாமிப்பட்டி, ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள மோப்ப நாய் பிரிவு படை அலுவலகம் அருகில் வைக்கப்பட்டிருந்தது.
மேகாவுக்கு காவல் துறையினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் காவல் துறை துணை கண்காணிப்பாளா் சரவணகுமாா் தலைமையில் காவல் துறையினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். மோப்ப நாய் மேகாவின் இழப்பு காவல் துறையினா் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஏ 21 டி டாக்...
உயிரிழந்த மோப்ப நாய் மேகாவின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தும் போலீஸாா்.