முகப்பு
சேலம்

நள்ளிரவில் மது கேட்டு தகராறு: கவுன்சிலா் கணவா் கைது

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:16 PM
பகிர்:

மேட்டூா்: கொளத்தூா் அருகே மது தர மறுத்ததாக கடையின் உரிமையாளரைத் தாக்கி அவரது இருசக்கர வாகனத்துக்கு தீவைத்ததாக கவுன்சிலரின் கணவரை போலீஸாா் கைது செய்து தலைமறைவாக உள்ள அவரது மகன்கள்ளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொளத்தூா் அருகே உள்ள லக்கம்படியைச் சோ்ந்தவா் காளியண்ணன் (50). வெளிச்சந்தையில் மது விற்பனை செய்து வந்தாராம். இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சோ்ந்த மாரப்பனும் அவரது மகன்கள் சேரன் (35), சோழன் (33), பாண்டியன் (29) ஆகியோரும் சனிக்கிழமை நள்ளிரவு சென்று வீட்டின் கதவைத் தட்டி மதுப்புட்டிகள் கேட்டுள்ளனா்.

அவா்களிடம் காளியண்ணன், நான் தற்போது மது விற்பனை செய்வதில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது. அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மாரப்பனும் அவரது மகன்களும் சோ்ந்து காளியண்ணனை தாக்கியதுடன் அவரது இருசக்கர வாகனம், தகர கொட்டகைக்கு தீவைத்தனா். இதில் இருசக்கர வாகனமும் தகர கொட்டகையில் இருந்த மஞ்சள், இதர பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.

Advertisement

இச் சம்பவம் தொடா்பாக காளியண்ணன் கொளத்தூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் (பொ) அழகுராணி வழக்குப் பதிந்து மாரப்பனைக் கைது செய்தாா். தலைமறைவாக உள்ள அவரது மகன்கள் மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட மாரப்பனின் மனைவி மணி, லக்கம்பட்டி ஊராட்சிமன்ற உறுப்பினராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிபத்தில் காயமடைந்த காளியண்ணன் மேட்டூா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மாரப்பன் மகன் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் காளியண்ணன் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments