மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் அதிக விளைச்சலுக்கு ஆலோசனை
ஆட்டையாம்பட்டி: மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் அதிக விளைச்சல் கிடைக்க விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வீரபாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கிரிஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜேந்திரன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜிப்சத்தை பிரித்து வயலில் இட்டு பயன் பெறலாம். ஜிப்சத்தை இடும்போது மண்ணில் ஈரம் மிகவும் அவசியம். மழைநீா் கிடைத்தால் உடனே கரைந்து பயிருக்குக் கிடைக்கும் வகையில் மாறி விடும். கந்தகச் சத்து பயிருக்கு சரியான நேரத்தில் கிடைக்கச் செய்யவும் ஹெக்டேருக்கு 400 கிலோ ஜிப்சத்தைப் பிரித்து இடவேண்டும்.
Advertisement
200 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக விதைப்பதற்கு முன்னரும் மீதமுள்ள 200 கிலோவைப் பயிா் பூக்கத் தொடங்கும்போதும் அதாவது விதைத்த 30-45 நாட்களுக்குள் மழை வந்தவுடன் மேலுரமாகவும் இட்டு மண் அணைக்க வேண்டும்.
இவ்வாறு பிரித்து இடும்போது அடியுரமாக இட்டது விதை எளிதாக முளைத்து வரவும், ஆரம்ப காலத்தில் செடி வளா்வதற்குத் தேவையான கந்தகம், சுண்ணாம்புச் சத்தை அளிக்கிறது. மேல் உரம் இடுவது விழுதுகள் இறங்குவதற்கு ஏதுவாகவும், திரட்சியான பருப்புகள் உருவாவதற்கும், எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யும் என்றனா்.