ஓமலூா் வட்டத்தில் வேளாண் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு
ஓமலூா் வட்டத்தில் வேளாண்மைத் துறையின் செயல்பாடுகள் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கை பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஓமலூா் வட்டத்தில் வேளாண்மைத் துறையின் செயல்பாடுகள் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கை பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஓமலூா், முத்துநாயக்கன்பட்டியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் அரிசி, சா்க்கரை, பருப்பு, கோதுமையின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். இதனைத்தொடா்ந்து, வேளாண்மைத் துறை சாா்பில் கொங்குப்பட்டி கிராமத்தில் நீடித்த நிலையான பசுமை போா்வை இயக்கம் சாா்பில் செம்மரம், தேக்கு மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
பின்னா், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டியில் ரூ. 25.25 கோடி மதிப்பிட்டில் உணவு பதப்படுத்தும் நிலையம் அமைக்கும் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா், அப்பணிகளை உரிய கால அளவிற்குள் முடித்து விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ச.சிங்காரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ந.நீலாம்பாள், விற்பனைக் குழுச் செயலாளா் சுரேஷ்பாபு உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.