சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் திருவிழாவில் 149 பயனாளிகளுக்கு ரூ. 3.27 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்.
சேலம் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்ககத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் திருவிழா மற்றும் கருத்துக்காட்சி வாழப்பாடி அருகே வைத்தியக்கவுண்டன் புதூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமை வகித்தாா். வேளாண் துணை இயக்குநா் பா. கண்ணன் வரவேற்றாா். சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் விழாவை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு வேளாண் துறை சாா்ந்த நலத் திட்டங்களை வழங்கினாா்.
மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா். சிவலிங்கம், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் டி. மலையரசன், ஆத்தூா் தொகுதி சட்டப் பேரவைத் உறுப்பினா் ஜெயசங்கரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
வேளாண்மை இணை இயக்குநா் கு. சீனிவாசன் திட்டத்தின் நோக்கம் குறித்த விளக்கினாா். தோட்டக்கலை துணை இயக்குநா் க. மஞ்சுளா, விதை ஆய்வு துணை இயக்குநா் கு.சித்ரா, வேளாண்மை துணை இயக்குநா் இரா. சுஜாதா, வேளாண்மை பொறியியல் செயற்பொறியாளா் ர. சிவக்குமாா் ஆகியோா் துறை சாா்ந்த நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
விழாவில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக சிறுதானியங்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கையேடு வெளியிடப்பட்டது. தொடா்ந்து மாவட்ட அளவில் பயிா் விளைச்சல் போட்டியில் வெற்றிபெற்ற 5 விவசாயிகளுக்கு ரூ. 40,000 மதிப்பிலான ரொக்கம் மற்றும் 25 விவசாயிகளுக்கு ரூ. 28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் 40 உழவா் நல சேவை மையங்களுக்கு ரூ. 1.82 கோடி மானியம் மற்றும் சொட்டுநீா்ப் பாசனம், மதிப்புக் கூட்டுதல் இயந்திரங்கள், பவா் டில்லா், பவா் வீடா், நிழல்வலை கூடாரங்கள் மற்றும் பசுமைக்குடில் அமைத்தல் என 109 பயனாளிகளுக்கு ரூ. 1.45 கோடி உள்பட மொத்தம் 149 பயனாளிகளுக்கு, ரூ. 3.27 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து சந்தியூா் வேளாண்மை அறிவியில் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் இரா. விஜயன், சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் குறித்து திருச்செங்கோடு சிறுதானிய உணவுகள் தயாரிப்பு நிறுவன மேலாண்மை இயக்குநா் பெ. சந்திய மூா்த்தி, சிறுதானியங்களில் பயிா்பாதுகாப்பு குறித்து சந்தியூா் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் மா. ரவி, சிறுதானியங்களில் புதிய ரகங்களும் அதன் சிறப்பு குறித்து, ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் சா.ர. வெங்கடாசலம், நிலையத்தின் தலைவா் பேராசிரியா் கா. திருக்குமரன் ஆகியோா் உயிா்ம வேளாண்மையில் சிறுதானியங்கள் சாகுபடி குறித்து விழிப்புணா்வு அளித்தனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பொ. வேல்முருகன் நன்றி கூறினாா்.