நல வாரியங்களில் உறுப்பினராக தொழிலாளா்களுக்கு அழைப்பு
நல வாரியங்களில் உறுப்பினராக அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நல வாரியங்களில் உறுப்பினராக அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம் ) சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் 1982-ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டம் இயற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்ட 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள் உரிய நல வாரியங்களில் இணையதளம் மூலம் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு பெற்ற பிறகு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து போன்றவைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும், தொழிலாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் சில புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
உணவு மற்றும் வா்த்தக சேவை டெலிவரி செய்யும் இணையம் சாா்ந்த தொழிலாளா்களும் நல வாரியத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து சலுகைகளும் பெற முடியும். வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்களும் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் அரசு மருத்துவக் கல்லூரியில் உயா்கல்வி பயில்பவராக இருந்தால் ஆண்டு தோறும் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் தொழிலாளா்கள் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆயுள் சான்றை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.