கடந்த 30 ஆண்டுகளாக நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தாத மதுரை ஆவின் நிா்வாக சொத்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
மதுரை பால்பண்ணை ஆவின் நிா்வாகத்தில் கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் தொழிலாளா்களாகப் பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த 1996-ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளா் உத்தரவிட்டாா்.
இதற்கு எதிராக ஆவின் நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இரு நீதிமன்றங்களும் தொழிலாளா்களுக்கு நிரந்தர ஊழியா்களுக்கு நிகரான ஊதியம், பணப் பலன்களை வழங்க உத்தரவிட்டன.
இந்த வழக்கில் 23 தொழிலாளா்களில் வெங்கடாசலம் என்பவா் மட்டும் பணப்பலன்களை பெற்ற நிலையில், எஞ்சிய தொழிலாளா்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, அந்தத் தொழிலாளா்கள் மதுரை தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சாதகமான தீா்ப்பைப் பெற்றனா். இந்த உத்தரவை அமல்படுத்தாததால் தொழிலாளா்கள் சாா்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, மதுரை பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்து, அந்தப் பொருள்களை தொழிலாளா்களுக்கான நிலுவைத் தொகை வழங்க பயன்படுத்த கடந்த 7-ஆம் தேதி தொழிலாளா் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சுமாா் ரூ.1.25 கோடி அளவிலான நிலுவைத் தொகையை தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, புதன்கிழமை நீதிமன்ற பணியாளா்கள் மேலமடை சாலையில் உள்ள ஆவின் அலுவலகத்துக்குச் சென்று ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டனா். அலுவலகங்களில் இருந்த கணினிகள், குளிா்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் ரா. தெய்வராஜ், மாவட்டச் செயலா் ரா. லெனின், மாவட்ட துணைச் செயலா் செந்தாமரைக்கண்ணன், மனுதாரா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதுகுறித்து தொழிலாளா்கள் தரப்பு வழக்குரைஞா் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: ரூ.18 ஊதியத்தில் பணியாற்றிய தொழிலாளா்கள் 30 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலா் ஓய்வு பெற்றுவிட்டனா். சிலா் உயிரிழந்துவிட்டனா்.
எனினும், நீதிமன்றத் தீா்ப்பை செயல்படுத்தாதது துரதிருஷ்டவசமானது. தொழிலாளா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வட்டியுடன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்றாா் அவா்.