முகப்பு
சேலம்

மக்களவைத் தோ்தல்: திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 12:52 AM
பகிர்:

கடந்த 10 ஆண்டு காலமாக பாஜக அரசு தமிழகத்துக்கு செய்த துரோகங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான இரா.ராஜேந்திரன் வலியுறுத்தினாா். வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவா்கள், திமுக நிா்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செவ்வாய்ப்பேட்டை பகுதி, அரிசிப்பாளையம், பொன்னம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் திமுக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு கூட்டத்திலும், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திரன் கலந்துகொண்டு, நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது: குறிப்பாக, கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு செய்த துரோகங்களையும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கப்பட்டதையும், மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும். மேலும், திமுக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினாா். கூட்டத்தில், சேலம் மாநகர திமுக செயலாளா் ரகுபதி, சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன், பகுதிச் செயலாளா் பிரகாஷ், ராஜா மற்றும் மணமேடு மோகன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், மாமன்ற உறுப்பினா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.