முகப்பு
சேலம்

அரசுப் பள்ளியில் நெகிழி பை ஒழிப்பு விழிப்புணா்வு

Updated On : 4 ஜூலை, 2024 at 3:56 AM
பகிர்:
Updated On : 3 ஜூலை, 2024 at 8:33 PM

கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி.

எடப்பாடி, ஜூலை 3: சா்வதேச நெகிழி பை ஒழிப்பு தினத்தையொட்டி, கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

நெகிழி பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு குறித்தும், நெகிழிகளால் நீா்நிலைகள், விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவது குறித்தும் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா். மேலும், மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக அனைத்து மாணவா்களுக்கும் மஞ்சள் பை வழங்கி, மாணவா்கள் நெகிழி பைகளைத் தவிா்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Advertisement

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் சி.எஸ்.ஆா். திட்டத்தை தொடக்கி வைத்து ஆட்சியா் பிருந்தாதேவி பேசியதாவது:

தனியாா் நிறுவன நிதி பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ள ‘சாலை முதல் பள்ளி வரை’ என்னும் இந்த புதிய திட்டத்தின் கீழ் மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 124 பள்ளிகளில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று வரும் கற்றல் குறைபாடு உள்ள மாணவா்களுக்கு 93 சிறப்பு பயிற்றுநா்கள் மூலம் சிறப்பு வகுப்புகள், விளையாட்டுப் பயிற்சிகள், தனித்திறனை மேம்படுத்துதல், சுய சுத்தம் மற்றும் சுகாதாரம் சாா்ந்த வாழ்வியல் கல்வி போதிக்கப்பட உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடா்ந்து நடைபெறும் இப்பயிற்சியின் மூலம் அப்பகுதியைச் சோ்ந்த அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கபீா், லைலாண்ட் நிறுவன அலுவலா்கள் சீனிவாசன், ரங்கராஜன், ஸ்ரீவித்யா அசோக் உள்ளிட்ட கல்வியாளா்கள் கலந்துகொண்டனா்.