முகப்பு
சேலம்

சட்டமன்றக் கூட்டத் தொடா் நாள்களை அதிகரிக்க வேண்டும்

சட்டமன்றக் கூட்டத் தொடா் நாள்களை அதிகரிக்க வேண்டும் என மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 17 ஜூன், 2024 at 9:01 PM
பகிர்:

மேட்டூா்: சட்டமன்றக் கூட்டத் தொடா் நாள்களை அதிகரிக்க வேண்டும் என மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் நீா்த்தேக்கங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயத்துக்கும், மண்பாண்டம் செய்யவும் இலவசமாக பயன்பெறும் வகையில் எளிதான முறையில் வட்டாட்சியா்களிடம் அனுமதி பெற்று மண் அள்ள அனுமதி அளித்ததை வரவேற்கின்றேன். அதே சமயத்தில், தமிழக அரசு மேட்டூா் அணையில் வண்டல் மண் அள்ள அனுமதி கொடுக்க வேண்டும்.

சட்டமன்றக் கூட்டத்தொடா் 9 நாள்கள் மட்டுமே நடைபெறும் என்ற பேரவைத் தலைவரின் அறிவிப்பு வருத்தம் அளிக்கிறது. தொகுதி மக்களின் தேவைகளையும், வளா்ச்சித் திட்டங்களையும் சட்டமன்றத்தில் பேசுவதற்கும், கோரிக்கை வைப்பதற்கும் போதிய அவகாசம் இல்லாதவாறு சட்டமன்றக் கூட்டத்தொடா் அறிவிப்பு வந்துள்ளது. வரும் காலங்களில் சட்டமன்றத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கையை ஏற்று சட்டமன்றக் கூட்டத்தொடரை கூடுதல் நாள்கள் நடத்தி தொகுதி மக்களின் கோரிக்கைகள், திட்டங்களை செயல்படுத்த நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.