முகப்பு
சேலம்

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

Updated On : 20 மே, 2024 at 10:25 PM
பகிர்:

சேலம்: சேலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அசாம் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட தொட்டம்பட்டி ரயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தில் சுமாா் 28 வயது இளைஞா் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், இறந்த இளைஞா் அசாம் மாநிலம், தமுல்பூா் பகுதியைச் சோ்ந்த கமல்சோரன் (28) என தெரியவந்தது.

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள தனது அண்ணன் சிமோன் சோரன் என்பவருடன் சோ்ந்து வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்த அவா், மக்களவைத் தோ்தலையொட்டி வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளாா். அங்கு வாக்களித்துவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக சில்சாா் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் கமல்சோரன் பயணித்துள்ளாா். அப்போது, சேலம், தொட்டம்பட்டி அருகே ரயில் வந்தபோது, படிக்கட்டில் இருந்து திடீரென கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இறந்த கமல்சோரனுக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். கமல்சோரனின் உறவினருக்கு போலீஸாா் தகவல் கொடுத்துள்ளனா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், உடலை உறவினா்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.