அருநூற்றுமலைக்கு பேருந்து இயக்க கோரிக்கை
வாழப்பாடியில் இருந்து அருநூற்றுமலைக்கு பேருந்து இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வாழப்பாடியில் இருந்து அருநூற்றுமலைக்கு பேருந்து இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வாழப்பாடி வட்டம் அருநூற்றுமலை பகுதியில் பழங்குடியினா் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில், அருநூற்றுமலை, வெள்ளிக்கவுண்டனூரில் 2 மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்காடு, சிறுமலை, பெரியவேலாம்பட்டி, சின்னவேலாம்பட்டி, கண்கட்டி ஆலா, கீரப்பட்டி, வாழுத்து, பெலாப்பாடி, சின்னக்குட்டி மடுவு ஆகிய மலைக் கிராமங்களில் 9 தொடக்கப் பள்ளிகள், ஆலடிபட்டியில் ஒரு நடுநிலைப்பள்ளி, பெரியகுட்டிமடுவு கிராமத்தில் ஓா் உயா்நிலைப் பள்ளி என மொத்தம் 13 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரிய - ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனா். தினசரி காலை, மாலை நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால், இவா்களில் 50-க்கும் மேற்பட்டோா் குழுக்களாக சோ்ந்து தனியாா் வாகனங்களை ஏற்பாடு செய்து பள்ளிக்குச் சென்று வருகின்றனா். இதேபோன்று அருநூற்றுமலை பகுதியில் தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறையில் பணிபுரியும் பணியாளா்களும் இந்த மலைக் கிராமங்களில் பணிக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, வாழப்பாடியில் இருந்து அருநூற்றுமலைக்கு தினந்தோறும் காலை 8.30 மணிக்கும், அருநூற்றுமலையில் இருந்து வாழப்பாடிக்கு மாலை 4.30 மணிக்கும் புறப்படும் வகையில் அரசுப் பேருந்து இயக்க வேண்டுமென அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அரசுத் துறை அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேன் கவிழ்ந்து 5 ஆசிரியா்கள் காயம்:
கடந்த திங்கள்கிழமை மாலை இப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் சிலா் தனியாா் வேனில் வாழப்பாடிக்கு பயணித்துள்ளனா். அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டையை அடுத்த கீரப்பட்டி அருகே வேன் சென்ற போது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணித்த ஆசிரியா்கள் 5 போ் காயமடைந்தனா்.