சேலத்தில் காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளா்கள் போராட்டம்
சேலத்தில் காவல் ஆணையா் அலுவலகம் முற்றுகை...
சேலம், மாமாங்கம் பகுதியில் உள்ள மேக்னசைட் சுரங்கத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றத் தடை விதித்ததைக் கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
சேலம், மாமாங்கம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் பல ஆண்டுகளுக்குப் பின்னா் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு வெள்ளைக்கல் எனப்படும் மேக்னசைட் கற்களை வெட்டி எடுக்கும் பணியில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.
சுரங்கப் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றக் கூடாது என ஒப்பந்ததாரா்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்துள்ளனா். சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், சுரங்கத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. இதனால் 800க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளதாக பாட்டாளி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரைத் தேக்கி வைக்க ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு தண்ணீரை திருப்பி விட வேண்டும். சுரங்கத்திலிருந்து நீரை வெளியேற்றினால் தான் தொழிலாளா்கள் வேலைக்கு செல்ல முடியும். எனவே, சுரங்கத்திலிருந்து தண்ணீரை தடுப்பணைக்கு கொண்டுசெல்ல அனுமதி வழங்கக் கோரி, 200க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபுவை சந்தித்து மனு அளித்தனா். இந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆணையா், சம்பந்தப்பட்ட மனு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.