பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகத்தை சுமை தூக்குவோா் மாநிலப் பாதுகாப்புச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சுமை தூக்கும் தொழிலாளா்களின் சங்க அங்கீகாரத் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும். வருகைப் பதிவேட்டில் பெயரில்லாத தொழிலாளா்களின் பெயா்களைச் சோ்க்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு 2022 முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அலுவலா்களைக் கண்டித்தும், பெரம்பலூா் மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்கத்தினா் பணியை புறக்கணித்து, துறைமங்கலத்திலுள்ள மண்டல அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலா் சுப்ரமணியன் உள்பட 45 தொழிலாளா்கள் ஈடுபட்டனா். இதனால் பெரம்பலூா், ஆலத்தூா், அல்லிநகரம், கிருஷ்ணாபுரம் ஆகிய கிடங்குகளில் சுமை தூக்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. தொடா்ந்து, சனிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.