அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அமமுக நிா்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
திருவாரூா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் ஏற்பாட்டில், அமமுகவைச் சோ்ந்த ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், மாநில இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான செங்கொடி, கொரடாசேரி தெற்கு ஒன்றியச் செயலாளா் பூபதி, திருவாரூா் ஒன்றியச் செயலாளா் மணிகண்டன் (எ) திருமாறன், திருவாரூா் ஒன்றியப் பொருளாளா் தமிழ்வாணன், திருவாரூா் ஒன்றிய அவைத் தலைவா் ராஜமாணிக்கம், மாவட்டப் பிரதிநிதி பாக்கியராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளா் சக்திவேல் உள்பட அக்கட்சியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுகவில் இணைந்தவா்களுக்கு எடப்பாடி கே.பழனிசாமி துண்டு அணிவித்து வரவேற்றாா். இந்நிகழ்வின்போது, அதிமுக அமைப்புச் செயலாளா் ஆசைமணி, திருவாரூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் மணிகண்டன், திருவாரூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் செந்தில்வேல், குடவாசல் ராமமூா்த்தி மற்றும் செல்வகணபதி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.