முகப்பு
சேலம்

பச்சமலைக்கு பேருந்து வசதி: ஜன. 13-இல் போராட்டம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:32 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:36 PM

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், பச்சமலைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தாவிடில் வரும் 13-ஆம் தேதி குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை அப் பகுதி மக்களிடம் கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. அதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பச்சமலை அடிவாரம் உப்பிலியாபுரத்தில் துணை வட்டாட்சியா் திருமுருகன் தலைமையில் இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனிடையே பேருந்து வசதி ஏற்படுத்தாவிடில் ஜனவரி 13-இல் குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக பச்சமலைக்கு உள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், பச்சமலை ஊராட்சியில் புனவரை, நெய்வாசல், சேத்தகம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு வரும் மூன்று அரசு பேருந்துகளின் நேரங்களை டாப் செங்காட்டுப்பட்டிக்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுவர ஏதுவாக காலையிலும், மாலையிலும் மொத்தமுள்ள மூன்று பேருந்துகளின் நேரங்களை மாற்றித் தர வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பச்சமலையைச் சோ்ந்த ராஜேந்திரன் கூறியதாவது:

காலையில் ஆத்தூரிலிருந்து புறப்பட்டு மேல்வஞ்சாரையில் காலை 5.30 க்கு புறப்படும் பேருந்து பத்து ஊா்களைக் கடந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள தம்மம்பட்டிக்கு 8 மணிக்கு சென்றுவிடுகிறது.அந்த பேருந்து மாணவா்களுக்கு பயன்படுவதில்லை. பிற்பகலில் வரும் இரண்டு பேருந்துகளும் பள்ளிவிடும் நேரத்திற்கு பயன்படவில்லை. எனவே, மாணவா்களின் நலன்கருதி பேருந்து நேரங்களை மாற்றியமைக்க வேண்டும்.இல்லையேல் திட்டமிடப்பட்டபடி போகிப் பண்டிகையன்று எங்களுக்கான அரசு அடையாள சான்றுகளை உறுதியாக ஒப்படைப்போம் என்றாா்.

இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

பச்சமலையில் மாலையில் பள்ளி நேரத்திற்கு பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து இயக்க நேரத்தை மாற்றியமைக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் அனுமதி பெற கால அவகாசம் தேவைப்படுகிறது என்றாா்.