முகப்பு
சேலம்

எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மனு

சேலம் எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு

Updated On : 20 ஜனவரி, 2025 at 8:20 PM
எருமாபாளையம் ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள்.
பகிர்:

சேலம்: சேலம் எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

எருமாபாளையம் ஊராட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவா் செங்கோடன் தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த 100 க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

பின்னா் முன்னாள் பஞ்சாயத்து தலைவா் செங்கோடன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எருமாபாளையம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவரும் கூலி வேலை உள்ளிட்ட அன்றாட வேலைகளை செய்து வருகின்றனா். இந்நிலையில், எருமாபாளையம் ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அவ்வாறு மாநகராட்சியுடன் இணைத்தால் குடிநீா் வரி, வீட்டு வரி உயரும். இதன் மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இதனால் அன்றாட கூலி வேலை செய்பவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

எனவே, எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. அவ்வாறு இணைக்க நடவடிக்கை எடுத்தால் ஊா் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றாா்.