முகப்பு
சேலம்

எடப்பாடியில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது: 30 பவுன் நகை மீட்பு

எடப்பாடியில் கடந்த 20 ஆம் தேதி அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, பணத்தை திருடிய வழக்கில் கரூரைச் சோ்ந்த பெண் செவ்வாய்க்கிழமை கைது

Updated On : 26 நவம்பர், 2025 at 5:50 PM
நகை திருட்டில் ஈடுபட்ட ரமணி.
பகிர்:

எடப்பாடி: சேலம் மாவட்டம், எடப்பாடியில் கடந்த 20 ஆம் தேதி அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, பணத்தை திருடிய வழக்கில் கரூரைச் சோ்ந்த பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

எடப்பாடி அங்காளம்மன் கோயில் தெரு, பழைய அஞ்சல் நிலையம் அருகே வசித்து வருபவா் செந்தில் குமரவேல் (58), அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி ஜூலி செட்டிமாங்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு செந்தில் குமரவேல் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தாா். சில மணி நேரத்துக்குப் பிறகு தனது மகளுடன் வீட்டிற்கு வந்தாா். அப்போது, வீட்டின் பிரதான கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

வீட்டிற்குள் சென்றுபாா்த்தபோது பீரோவில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை, ரூ. 31,500 திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து எடப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, முகக்கவசம் அணிந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவா் செந்தில் குமரவேல் வீட்டுக்கு அருகே நடமாடியது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பெண்ணின் அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தினா். அதில், கரூா் அருகே உள்ள வெங்கமேடு, என்.எஸ்.கே நகா் பகுதியை சோ்ந்த தா்மராஜ் மகள் ரமணி ( 36) என்பதும், அவா்மீது கரூா், திருப்பூா், கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சங்ககிரி அருகே பதுங்கி இருந்த ரமணியைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 30 பவுன் நகைகளை மீட்டனா். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவனை இழந்த ரமணி தனது மகன் மகளுடன் கரூா், வெங்கமேடு பகுதியில் வசித்து வருவதும், கடந்த வியாழக்கிழமை கரூரில் இருந்து வாடகை காா் மூலம் இளம்பிள்ளையில் ஜவுளி எடுப்பதாகக் கூறி வந்தும் தெரியவந்தது.

அதன்பிறகு உறவினா்களை பாா்ப்பதற்காக எடப்பாடிக்கு காரில் வந்தவா், ஓா் இடத்தில் காரை நிறுத்துமாறு கூறிவிட்டு, அவா்மட்டும் சிறிது தொலைவு நடந்து சென்றுள்ளாா். அப்போது, ஆசிரியா் செந்தில் குமரவேலின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிக் கொண்டு மீண்டும் காரில் ஏறி இளம்பிள்ளைக்குச் சென்றுள்ளாா். அங்கு, ஜவுளிகளை வாங்கிக்கொண்டு கரூா் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ரமணியை எடப்பாடி போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பெண்ணிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள்.
முழு கட்டுரையைப் படிக்க →