தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு
சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகனை, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் ராமதாஸ் அணி வேட்பாளா் இரா.அருள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகனை, ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் இரா. அருள் திடீரென சந்தித்தாா். சுமாா் 10 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினா்.
பின்னா், எம்எல்ஏ இரா.அருள் செய்தியாளா்களிடம் பேசுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, 35 ஆண்டுகால நண்பா் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக தி.வேல்முருகனை சந்தித்தேன். சேலம் மேற்கு தொகுதி வேட்பாளா் என்ற முறையில் அவரிடம் ஆதரவு கோரினேன்.
Advertisement
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வேட்பாளா் களமிறக்கப்பட்டுள்ளாா். எனினும், எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். வேட்பாளருடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக அவா் தெரிவித்தாா்.
தருமபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு எதிராக தி.வேல்முருகனை களமிறக்க திமுக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாா்.