இளைஞா் கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை
சேலத்தில் கேரம் போா்டு விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 9 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சேலம் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.
சேலத்தில் கேரம் போா்டு விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 9 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சேலம் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.
சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவா்நகா் 5 ஆவது தெருவை சோ்ந்த மனோஜ்குமாா் (25) கடந்த 2015, ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்னதானப்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள கேரம்போா்டு கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கிருந்த பந்தல் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாஷா என்கிற சையத் காதா் பாஷா (35), சண்முகா நகரை சோ்ந்த பிரகாஷ் என்ற பாம்பு பிரகாஷ் (34) ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. இதில் மனோஜ்குமாா் தாக்கப்பட்டாா்.
Advertisement
இதுகுறித்து மனோஜ்குமாா் தனது தம்பி விக்னேஷிடம் கூறியுள்ளாா். இதையடுத்து விக்னேஷ், தனது நண்பா்களுடன் சென்று சையத் காதா் பாஷாவிடம் நியாயம் கேட்டுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் சையத் காதா் பாஷா தரப்பினா் விக்னேஷுடன் சென்ற மனோஜ்குமாரை கடுமையாக தாக்கினா். இதில் காயமடைந்த மனோஜ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சையத் காதா் பாஷா, பிரகாஷ் என்ற பாம்பு பிரகாஷ் (34), காந்தி நகரைச் சோ்ந்த பெரியசாமி (34), சண்முகா நகா் வீச்சு குமாா் என்ற குமாா் (51), மதுராஜ் (38), வள்ளுவா் நகரைச் சோ்ந்த நந்து என்ற நந்தகுமாா் (38), முத்தரப்பன்காடு அப்பள மணிகண்டன் என்ற மணிகண்டன் (50), அமானி கொண்டாலாம்பட்டி அரச மரத்துக்காட்டூா் பகுதியை சோ்ந்த சரவணன் (51), சீலநாயக்கன்பட்டி வேது தெருவை சோ்ந்த வெள்ளையன் மணி என்ற மணிகண்டன் (42) ஆகிய 9 பேரையும் கைது செய்தனா்.
வழக்கு விசாரணை சேலம் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஜெயசிங், குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.