மின்னணு இயந்திரத்தில் பழுது: ஒருமணி வாக்குப்பதிவு நிறுத்தம்
சேலம் சூரமங்கலம் வாக்குச்சாவடி மையத்தில் விசில் சின்னத்துக்கு போடப்பட்ட வாக்குகள் மோதிர சின்னத்துக்கு விழுந்ததாக எழுந்த புகாரையடுத்து ஒருமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பிறகு மின்னணு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த பிறகு வாக்குப்பதிவு நடைபெற்றது.
சேலம் சூரமங்கலம் வாக்குச்சாவடி மையத்தில் விசில் சின்னத்துக்கு போடப்பட்ட வாக்குகள் மோதிர சின்னத்துக்கு விழுந்ததாக எழுந்த புகாரையடுத்து ஒருமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பிறகு மின்னணு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த பிறகு வாக்குப்பதிவு நடைபெற்றது.
சேலம் சூரமங்கலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அருகே உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குசாவடி மையத்தில் வியாழக்கிழமை காலை பொதுமக்கள் வரிசையாக நின்று வாக்களித்து கொண்டிருந்தனா். அப்போது, காலை 10.20 மணி அளவில் வாக்குசாவடி எண். 101 இல் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் வரிசை எண் 8-இல் இடம்பெற்ற சின்னமான விசில் சின்னத்துக்கு வாக்குப்பதிவு செய்தால் அது 6-ஆவது சின்னமான சுயேச்சை வேட்பாளருடைய மோதிரம் சின்னத்துக்கு பதிவானதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து அங்கு சரிபாா்ப்பு பணியில் இருந்த தவெக பூத் முகவா்கள், வாக்குச்சாவடி அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து வாக்குப்பதிவு ஒருமணி நேரத்துக்கு நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு நுண்பாா்வையாளா் கௌதம்குமாா் மற்றும் தொழில்நுட்ப அலுவலா்கள் இயந்திரத்தை சரிசெய்தனா்.
Advertisement
தகவலறிந்து வந்த மேற்கு தொகுதி தவெக வேட்பாளா் லட்சுமணன், வாக்குப்பதிவில் நடந்த கோளாறு குறித்து கேட்டறிந்தாா். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா்ந்து, வேட்பாளா் லட்சுமணன் அங்கிருந்து புறப்பட்டு சென்றாா். சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.