முகப்பு
சேலம்

காதலிப்பதாகக் கூறி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோா் புகாா்!

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பள்ளி மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெற்றோா் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:49 AM
பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பள்ளி மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெற்றோா் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

மேட்டூா் அருகே உள்ள கிராமத்தில் 11 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவியை அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் காதலிப்பதாகக் கூறி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், மாணவிக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து தந்த இளைஞா், தனது நண்பா்களுடன் சோ்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் தனக்கு நோ்ந்த சம்பவத்தை பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளாா். பின்னா், ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ள ஸ்கேன் மையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவியை பரிசோதனை செய்தபோது அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

அவா்கள் அளித்த புகாா் மனுவில், மாணவியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவா் மற்றும் அவரது நண்பா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.