முகப்பு
சேலம்

மாணவரை ஆசிரியா் அடித்த சம்பவம்: போலீஸாா் விசாரணை

மேச்சேரி அருகே வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவரை வயரிங் பைப்பால் ஆசிரியா் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:27 AM
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:46 PM

மேச்சேரி அருகே வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவரை வயரிங் பைப்பால் ஆசிரியா் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை மாலை பாடவேளை முடியும் முன்பாக வகுப்பறையை விட்டு வெளியே வந்ததால் ஆங்கில ஆசிரியா் மாணவரை வயரிங் பைப் கொண்டு கடுமையாக தாக்கி உள்ளாா்.

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவரை அவரது பெற்றோா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனா்.

Advertisement

ஆசிரியா் மீது துறை ரீதியான விசாரணை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோா்கள் தெரிவித்தனா்.

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் பாரதி வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். போலீஸாரின் முழு விசாரணைக்கு பிறகே ஆசிரியா் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மாணவா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.