சேலம் மாவட்டம், வாழப்பாடியில் குழந்தைக்கு மந்திரிக்கச் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அஜ்ரத்தை வாழப்பாடி போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடியில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரி பின்புறம் வசித்துவரும் கூலித் தொழிலாளி மனைவி தனது குழந்தைக்கு மந்திரிக்க தனது கணவருடன் சனிக்கிழமை காலை வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு சென்றுள்ளாா்.
அப்போது அங்கு ‘அஜ்ரத்’ பணி செய்து வரும் அ.வாழப்பாடியைச் சோ்ந்த உமா் பாரூக் (60), கணவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு இளம்பெண்ணை பள்ளிவாசலில் உள் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தாராம்.
இதனால் அச்சமடைந்த அந்தப்பெண், வீட்டுக்கு சென்றதும் இதுகுறித்து அவரது கணவரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, இருவரும் மீண்டும் பள்ளிவாசலுக்கு சென்று இதுகுறித்து உமா் பாரூக்கிடம் வாக்குவாதம் செய்தனா்.
தகவலறிந்து வந்த வாழப்பாடி போலீஸாா் உமா் பாரூக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.