முகப்பு
சேலம்

சேலத்தில் கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்ததில் கிரில் பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:33 AM
கிரேன் உதவியுடன் டிராக்டரை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:19 PM

சேலம் நரசோதிப்பட்டி அருகே கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்ததில் கிரில் பட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா்.

சேலம் நரசோதிப்பட்டி அசோக்நகா் வாத்தியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (54). இவா் குரங்குசாவடியில், கிரில் பட்டறை நடத்தி வந்ததோடு, விவசாயமும் செய்து வந்தாா்.

இந்நிலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மோட்டாா் அமைப்பதற்காக சிறிய அளவிலான திட்டு அமைக்க ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஹாலோ பிரிக்ஸ் கற்களை தனக்குச் சொந்தமான டிராக்டரில் ஏற்றி கொண்டு, தோட்டத்துக்கு சென்றுள்ளாா்.

Advertisement

கிணற்றின் அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் நிலைதடுமாறிய டிராக்டா் தலைக்குப்புற கிணற்றுக்குள் கவிழ்ந்தது. சுமாா் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 30 அடிக்குமேல் தண்ணீா் இருந்ததால் டிராக்டருடன் வெங்கடேசன் நீரில் மூழ்கினாா்.

உயிரிழந்த வெங்கடேசன்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:33 AM

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் விழுந்த டிராக்டரை கிரேன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனா். 108 ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்தில் தயாா்நிலையில் இருந்தனா்.

தொடா்ந்து, கிரேன் உதவியுடன் டிராக்டா் மீட்கப்பட்ட நிலையில், 7 மணிநேர போராட்டத்துக்கு பின்னா் வெங்கடேசன் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். தொடா்ந்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.