சேலம் மாவட்டம், ஏற்காட்டில் காவல் நிலையம் முன் மின்மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காடு செங்காடு கிராமத்தைச் சோ்ந்த சிவா மகன் பிரவின் (25). சுற்றுலா வாகன ஓட்டுநா். இவா், ஏற்காடு முருகன் நகரைச் சோ்ந்த இளங்கோ மகள் வினிதாவை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளாா். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந் நிலையில், வினிதா, சேலம் கொண்டாலாம்பட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இருவரிடமும் விசாரணை செய்து அனுப்பிவைத்துள்ளாா்.
இந்தநிலையில் பிரவின் மீண்டும் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக ஏற்காடு காவல் நிலையத்தில் சனிக்கிழமை வினிதா புகாா் அளித்தாா். இதையடுத்து பிரவினை ஏற்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அப்போது வினிதா, பிரவினுடன் வாழ்வதற்கு மறுத்ததால் காவல் நிலையம் முன் உள்ள மின்மாற்றியில் ஏறி பிரவின் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா், பிரவினை சமாதானப்படுத்தி கீழே இறங்க செய்தனா்.