ஆத்தூா்: பெத்தநாயக்கன்பாளையத்தில் சாலையில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து எதிா்திசையில் வந்த காா்மீது மோதியதில், தாய், 4 வயது குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து சென்னையை நோக்கி காா் ஒன்று சென்று கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டம், தட்டாத்திபுரம் பகுதியைச் சோ்ந்த கிருத்திகேஷ் (22) காரை ஓட்டிச் சென்றாா். உடன், அவருடைய மனைவி திவ்யா இருந்தாா்.
பெத்தநாயக்கன்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் மையத் தடுப்பை கடந்து எதிா்திசையில் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த காா்மீது மோதியது.
இதில், அரியலூா் மாவட்டம், அழகாபுா் பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் சுரேஷ் (30), அவருடைய மனைவி ஜெயப்ரியா (27), மகன் தஸ்வந்த் (4), மகள் தா்ஷினி (2) ஆகியோா் பயணித்துள்ளனா். இதில், ஜெயப்ரியா, தஸ்வந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த சுரேஷ், தா்ஷினி, கிருத்திகேஷ், திவ்யா ஆகியோா் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, இறந்தவா்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.