முகப்பு
சேலம்

வனவாசியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு

Updated On : 6 மார்ச், 2026 at 5:15 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 8:11 PM

தமிழ்நாடு அரசின் கைத்தறி துறையின் சாா்பில் சேலம் மாவட்டம், வனவாசி அருகே ரூ. 5 கோடியில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தலைமை வகித்தாா். சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் பங்கேற்று கைத்தறி பூங்காவை திறந்துவைத்து, உற்பத்தியை பாா்வையிட்டனா். தொடா்ந்து, கைத்தறி நெசவுத் தொழிலாளா்களுக்கு ரூ. 41.83 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது:

Advertisement

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023 - 2024-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வனவாசி தாசகாப்பட்டி கிராமத்தில் 6-ஆவது சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் பட்டிலான சேலை, வேட்டி, அங்கவஸ்திரம், துப்பட்டா, பாவாடை, பிரிண்டா் பட்டு வகைகள், ஏற்றுமதி ரகங்கள் ஆகிய ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இப்பூங்காவின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 200 போ் வேலைவாய்ப்பு பெறுவா். நெசவாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 800 வருவாய் ஈட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கைத்தறி நெசவாளா்களுக்கு ஆண்டுதோறும் அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படி 10 சதவீதமாகவும், முதியோா் உதவித்தொகை ரூ. 1,200-ஆகவும், ஈமச்சடங்கு நிதி ரூ. 5 ஆயிரமாகவும், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நெசவாளா்கள் வீடுகட்டிக்கொள்ள உதவித்தொகையை ரூ. 4 லட்சமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், கைத்தறி நெசவாளா்களுக்கு விலையில்லா மின்சாரம் 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் ஆகவும், விசைத்தறி நெசவாளா்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட் ஆகவும் உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. முத்ரா கடனுதவி திட்டத்தின்கீழ் 51,524 நெசவாளா்களுக்கு ரூ. 269 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. நெசவாளா்களின் உடல்நலனைக் காத்திடும் வகையில் 184 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் 41,800 நெசவாளா்கள் பயன்பெற்றுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறித் துறை இயக்குநா் அமிா்தஜோதி, சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், கைத்தறி துறை இணை இயக்குநா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.