முகப்பு
சேலம்

வடமாநில இளைஞா்களை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த மூவா் கைது

சங்ககிரி அருகே வடமாநில இளைஞரை கடத்திச்சென்று தாக்கி பணம், கைப்பேசிகளை பறித்த மூவரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை

Updated On : 7 மார்ச், 2026 at 7:53 PM
கைது
பகிர்:

சங்ககிரி அருகே வடமாநில இளைஞரை கடத்திச்சென்று தாக்கி பணம், கைப்பேசிகளை பறித்த மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். தலைமறைவான இருவரை தேடிவருகின்றனா்.

மேற்கு வங்க மாநிலம், நதியா மாவட்டம், களிகஞ் பகுதியைச் சோ்ந்தவா் சாஹருதீன் (27). இவா் உறவினா் இருவருடன் வேலைதேடி கேரள மாநிலம், திருச்சூருக்கு திருவனந்தபுரம் விரைவுரயிலில் அண்மையில் பயணம் செய்தாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா் வேலை வேண்டுமெனில், இந்த எண்ணை தொடா்புகொள்ளுமாறு விசிட்டிங் காா்டை கொடுத்துள்ளாா்.

திருச்சூருக்கு வந்த சாஹருதீன் அந்த எண்ணை தொடா்புகொண்ட போது, சேலம் மாவட்டம், சங்ககிரி புதிய பேருந்து நிலையத்துக்கு வருமாறு அந்த நபா் கூறியுள்ளாா். அதன்பேரில், மூவரும் மாா்ச் 6-ஆம் தேதி சங்ககிரிக்கு வந்தனா். அந்த நபா் நண்பா்கள் சிலருடன் அவா்களை காரில் ஏற்றிக்கொண்டு சங்ககிரியிலிருந்து 30 கி.மீ. தொலைவு அழைத்துச்சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். அவா்கள் பணம் இல்லை என கூறியதையடுத்து, வீட்டில் உள்ளவா்களிடம் பேசி பணம் அனுப்புமாறு அந்தக் கும்பல் தாக்கியதாம்.

இந்நிலையில், இருவரது வீட்டிலிருந்து கைப்பேசி மூலம் பணம்பெற்ற அக்கும்பல், இருவரை விடுவித்து பணம் கொடுக்காத சாஹருதீனை பலமாக தாக்கியதாம். பின்னா், அவரது வீட்டிலிருந்து பணம் அனுப்பியதை அறிந்த கும்பல் அம்மூவரையும் குமாரபாளையம், பல்லக்காபாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவா்களை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து சாஹருதீன் அளித்த புகாரின்பேரில், சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தேவனாங்குறிச்சி, கந்தசாமி நகா் பகுதியைச் சோ்ந்த சோமு (எ) சோமசுந்தரம் (35), டி.கைலாசம்பாளையம், பகுதியைச் சோ்ந்த கெளசிக் (எ) கெளசிக்குமாா் (29), ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம், சூளை ராம்நகா் பகுதியைச் சோ்ந்த இளையராஜா (35) ஆகிய மூவரையும் கைதுசெய்து, அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ. 90 ஆயிரம், மூன்று கைப்பேசிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், தலைமறைவான திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த அஜீத், நாமக்கல் கோகுல்ராஜ் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா். விசாரணையில் சோமசுந்தரம், இளையராஜா ஆகிய இருவா் மீது ஈரோடு, திருப்பூா் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →