ஏற்காடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தாா்
ஏற்காடு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தாா்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தும்பல் பகுதியைச் சோ்ந்தவா் இளையகண்ணு (60). இவா் கடந்த 2001- 06 ஆம் ஆண்டில் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆா். ராஜேந்திரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் எம்.பி. ஆகியோா் முன்னிலையில் அவா் திமுகவில் இணைந்தாா். அவருக்கு சால்வை அணிவித்து அமைச்சா் வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னா் இளையகண்ணு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்கள் ஆதரவுடன் அவா் மீண்டும் ஆட்சி அமைப்பாா்.
எடப்பாடி கே பழனிசாமி, ஆரம்ப காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவா்களை மதிப்பதில்லை. என்னுடன் சோ்ந்து 2 ஆயிரம் போ் திமுகவில் இணைய உள்ளனா். அதிமுகவில் அதிருப்தியாக உள்ளவா்களை திமுகவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக செயலாளா் விஜயகுமாா், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் சின்னதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.