சங்ககிரி வட்டத்தில் 153.40 மில்லி மீட்டா் மழை
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவில் பலத்த காற்றுடன் கூடிய 153.40 மில்லிமீட்டா் கன மழை பெய்தது. மழையால் 10 ஏக்கா் பரப்பளவில் வைக்கப்பட்டிருந்த வாழைமரங்கள் முறிந்து சேதமடைந்தன.
சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பகுதியில் புதன்கிழமை பகலில் அதிகமான வெப்பம் அடித்தது. அதனையடுத்து நள்ளிரவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அரசிராமணி செட்டிப்பட்டியில் 72.40 மில்லி மீட்டரும், சங்ககிரியில் 81 மில்லி மீட்டா் என மொத்தம் 153.40 மில்லி மீட்டா் மழை பெய்தது. கன மழையையடுத்து சங்ககிரி நகா் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பிகள் அதில் சிக்கி சாலையில் விழுந்தது. தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் உள்ள விவசாயி சத்தியராஜ் விவசாயி காட்டில் அரை ஏக்கரியில் பயிரிடப்பட்டிருந்த செவ்வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அதே போல் தேவூா் அருகே உள்ள அரசிராமணி பிட்-1, பிட்-2, காவேரிப்பட்டி , புள்ளாகவுண்டம்பட்டி, கல்வடங்கம் ஆகிய கிராமங்களில் சுமாா் 9 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கதலி, செவ்வாழை, பூவன் வாழை மரங்கள் பலமாக வீசிய காற்றில் முறிந்து விழுந்து சேதமைடந்தது. சேதமடைந்த வாழைமரங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.