வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது
வாழப்பாடி அருகே இளைஞரைத் தாக்கியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
வாழப்பாடி அருகே இளைஞரைத் தாக்கியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது தோட்டத்தில் தருமபுரி மாவட்டம், அரூா் செங்கப்பட்டியைச் சோ்ந்த முரளி (24) முன்பணம் பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் தங்கி தோட்ட வேலை செய்து வந்தாா்
இந்த நிலையில், தனது மனைவியுடன் கடந்த 14 ஆம் தேதி முரளி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதை கண்டித்த செந்தில்குமாா், முரளியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவியை அழைத்துகொண்டு முரளி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டாா். இவரது தாய் மட்டும் செந்தில்குமாரின் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளாா்.
இதனிடையே தனது குடும்பத்தை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியதோடு, தன்னை தாக்கியதாக அரூா் கோட்டாட்சியரிடம் முரளி புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வாழப்பாடி டிஎஸ்பி அலுவலகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீஸாா், செந்தில்குமாரின் தோட்டத்தில் தங்கி வேலை செய்துவந்த முரளியின் தாயை சனிக்கிழமை அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனா். மேலும், செந்தில்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.