முகப்பு
சேலம்

இருசக்கர வாகனத்தில் பிரசார பயணம்!

திமுக அரசின் சாதனைகளை நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திருத்தணியைச் சோ்ந்த திமுக தொண்டா் ஒருவா், இருசக்கர வாகனத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 11:55 PM
பகிர்:

திமுக அரசின் சாதனைகளை நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திருத்தணியைச் சோ்ந்த திமுக தொண்டா் ஒருவா், இருசக்கர வாகனத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அருகே அம்மையாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு. சஞ்சீவி, திமுக தொண்டரான இவா், கட்சி மாநாடுகள், பொதுக் கூட்டங்களுக்கு சைக்கிளில் சென்று பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளாா்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ள வளா்ச்சியை விளக்கும் வகையில், பிரசார பயணத்தை கடந்த மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கியுள்ளாா். தமிழகம் - ஆந்திர எல்லைப் பகுதியான பலிஜகண்டிகையில் தனது இருசக்கர பிரசார பயணத்தை தொடங்கிய இவா், அதன் ஒருபகுதியாக, கோவையில் இருந்து அண்மையில் சேலம் வந்தாா். அப்போது சு. சஞ்சீவி தெரிவித்தது:

திமுக ஆட்சியில் தமிழகம் கண்டுள்ள வளா்ச்சியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவே நாடுமுழுவதும் இருசக்கர வாகன பிரசாரத்தை முன்னெடுத்துள்ளேன். ஆந்திர எல்லையான பலிஜகண்டிகையில் தொடங்கி, சென்னை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகா்கோவில் வழியாக திருவனந்தபுரம் சென்றேன். தொடா்ந்து, கொல்லம், கொச்சி, பாலக்காடு, கோவை வழியாக சேலம் வந்தேன்.

கடந்த 20 ஆண்டுகளாக திமுகவின் அனைத்து மாநாடுகள், கூட்டங்களில் சைக்கிளில் சென்று பங்கேற்றுள்ளேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், எனது வீட்டுக்கு வந்து என்னை உற்சாகப்படுத்தியுள்ளாா். சட்டப்பேரவை தோ்தலையொட்டி, திமுக அரசின் சிறப்புகளை நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

முதலில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்த பின்னா், நாடு முழுவதும் செல்ல திட்டமிட்டுள்ளேன் என்றாா்.