வாழப்பாடி அருகே வாகனச் சோதனை: திருமணத்திற்கு வாங்கிச் சென்ற 2.5 பவுன் நகை பறிமுதல்
வாழப்பாடி, மாா்ச் 30: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் குப்பனூா் அருகே திருமணத்திற்கு வாங்கிச் சென்ற 2.5 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ஏற்காடு அருகே மாரமங்கலம் ஊராட்சி, குட்டமாத்திக்காடு மலைக் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி தனது மகள் திருமணத்திற்காக வீட்டில் இருந்த பழைய நகைகளை பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள நகைக்கடையில் கொடுத்துவிட்டு, 2.5 பவுன் புதிய நகைகளை வாங்கிக் கொண்டு ஜீப்பில் குப்பனூா் வழியாக மாரமங்கலம் நோக்கி வந்துள்ளாா்.
அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும்படை அலுவலரான சேலம் வருமானவரித் துறை அலுவலா் மேரி ஷாலினி, இவா்களது வாகனத்தை ஆய்வு செய்தாா். அப்போது விவசாயி வாங்கி வைத்திருந்த 2.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தாா். நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்த நகைகளை ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலரான வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமியிடம் திங்கள்கிழமை இரவு ஒப்படைத்தாா்.
கடையில் நகை வாங்கியதற்கான ஆவணங்களை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காட்டி, நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு தோ்தல் நடத்தும் துணை அலுவலா் தெரிவித்ததால், விவசாயி குடும்பத்தினா் சோகத்துடன் வீடு திரும்பினா்.