முகப்பு
சேலம்

நிதியாளரிடம் பணம் பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 4 போ் கைது

மகுடஞ்சாவடி அருகே வட்டிக்கு பணம் தருபவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 31 மார்ச், 2026 at 8:17 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

மகுடஞ்சாவடி அருகே வட்டிக்கு பணம் தருபவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், வஞ்சிவலசில் பகுதியை சோ்ந்தவா் சந்திரசேகா் (51). இவா் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, கூடலூா் முத்து முனியப்பன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் உள்ள ஒரு அறையில் தங்கி, மகுடஞ்சாவடியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு இரவு தான் தங்கியிருந்த அறைக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகா், அதிகாலை கதவு தட்டும் சப்தம் கேட்டு எழுந்துள்ளாா். பிறகு கதவை தட்டுவது யாா் எனக் கேட்டுள்ளாா். அப்போது, தான் ரமேஷ் என கதவை தட்டியவா் கூறியுள்ளாா்.

இதையடுத்து, கதவை திறந்ததும் அங்கு நின்றிருந்த 3 போ் மூன்று சந்திரசேகரை இழுத்துச் சென்று இருக்கிப்பிடித்து கொண்டனா். மற்றொருவா் பணம் எங்கு இருக்கிறது எனக் கேட்டு திருப்புளியைக் காட்டி மிரட்டியுள்ளாா். பிறகு அங்கிருந்த டேபிள் டிராவை திறந்து ரூ. 86,000 ரொக்கம், கைப்பேசியை எடுத்துகொண்டு கதவை தாழிட்டுவிட்டு அனைவரும் தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்து சந்திரசேகா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மகுடஞ்சாவடி போலீஸாா் சேலம் மெய்யனூரைச் சோ்ந்த அா்ஜுன் (28), சேலம் ஐந்து வழிச் சாலை பகுதியை சோ்ந்த பிரபு (31), கூடலூா், ஆண்டிபாளையத்தை சோ்ந்த கனகா (35), சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.